Friday, July 4, 2008

சாந்தி மந்திரம் (இசாவாச்யம்)

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

Om poornamadha: poornamidham poornaadh poornamidhachyadhe
poornasya poornamaadhaaya poornamevaa vashishyathe
Om shaanthi: shaanthi: shaanthi:

விளக்கம்:
'இறைவன் முழுமையானவர். இந்தம் உலகமும் முழுமையானது. முழுமையான இறைவனிலிருந்தே முழுமையான உலகம் தோன்றியுள்ளது. முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பின்பும் முழுமையே எஞ்சியுள்ளது.'

ஒரு புதிரின் மூலம் உலகத்தை விளக்கம் முற்படுகின்ற மந்திரம் இது. இறைவன் முழுமையானவராக, பூரணமானவராக இருக்கிறார். அவரிலிருந்து முழுமையான உலகம் தொன்றியுள்ளது. இருப்பினும் தனது பூரணத்துவம் குன்றாமல் முழுமையாகவே இருக்கிறார் அவர்.

இறைவனின் முழுமை உலகங்களின் தோற்றத்தாலோ மறைவாலோ பாதிக்கப்படாத ஒன்று. இறைவனிலிருந்து தோன்றியதால் உலகமும் இறையம்சம் பொருந்தியது என்பது இந்த சாந்தி மந்திரத்தின் கருத்து.

வேத மந்திரங்கள் அனைத்தும் இறுதியில் ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: என்று நிறைவுறுவதைக் காணலாம். சாந்தி: என்றால் அமைதி. மூன்று விதமான தடைகளிலிருந்து நாம் விடுபடுவதற்காக மூன்று முறை சொல்லப்படுகிறது. மூன்று முறை சொல்லப்படுகிறது.

ஆத்யாத்மிகம்: நம்மால் வரும் தடை; உடல் நோய், மனப் பிரச்சனைகள் போன்றவை.
ஆதி பௌதிகம் : பிற உயிர்களால் வரும் தடை.
ஆதி தைவிகம்: இயற்கைச் சக்திகளால் வரும் தடை; மழை, இடி, தீ போன்றவற்றால் வருபவை.

மூன்று முறை சொல்வதன் மூலம் இந்த மூவகைத் தடைகளிலிருந்து விடுபட்டு, இந்த உபநிஷதத்தைப் படிப்பதற்கான நமது முயற்சி வெற்றி பெறுவதற்காகப் பிரார்த்திக்கிறோம்.

இசாவாச்ய உபநிஷதம்

'ஈசாவாஸ்யம் இதம் சர்வம்' என்ற மந்திரத்துடன் ஆரம்பிப்பதால் இது ஈசாவாஸ்ய உபநிஷதம் என்ற பெயர் பெற்றது. ஈச உபநிஷதம் என்றும் அழைக்கப்படுகின்ற இது பதினெட்டு மந்திரங்களே உடைய சிறிய உபநிஷதம் ஆகும்.

யஜூர் வேதத்தில் கிருஷ்ண யஜூர் வேதம், சுக்ல யஜூர் வேதம் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. சுக்ல யஜூர் வேதத்தில் வாஜஸனேய சம்ஹிதையில் நாற்பது அத்தியாயங்அளில் கடைசி அத்தியாயம் இது. தத்யங் அதர்வணர் என்ற முனிவர் தமது மகனுக்கு இதனை உபதேசித்தார். அவன் ஆசைகள் அற்றவனாகவும் முக்தியில் தீவிர நாட்டம் கொண்டவனாகவும் இருந்ததால் அந்த முனிவர் அவனுக்கு இந்த உபநிஷதத்தை உபதேசித்தார்.

'இருளுக்கு அப்பால் பொன்னிறத்தில் ஒளிர்கின்ற மகிமை வாய்ந்த பரம்பொருளை அறிந்துகொண்டேன்' என்று ஆனந்த மிகுதியில் முனிவர் ஒருவர் கூறுவதை சுவேதஸ்வதர உபநிஷதத்தில் காண்கிறோம். ஆனால் அந்த ஒளிக்கு அப்பால் உள்ள ஒன்றைத் தேடுகின்ற முயற்சியை இங்கே பார்க்கிறோம். ஈச வித்யை என்று இந்த உபநிஷதம் கூறுகின்ற இந்தக் கருத்தே ஈசாவாஸ்ய உபநிஷதத்தின் மையக் கருவாக உள்ளது.

ஒளிக்கு அப்பாலுள்ள ஒன்றைத் தேடும் முயற்சியையும் ஒளிக்கு அப்பால் என்ன உள்ளது என்பதையும் படிப்படியாக இங்கே நாம் காண்கிறோம்.

மூலம் : ஈசாவாஸ்ய உபநிஷதம், ராமகிருஷ்ண மடம், சென்னை.

Thursday, July 3, 2008

உபநிஷதங்கள் ஓர் அறிமுகம்

உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், ஸ்ரீமத் பகவத் கீதை மூன்றும், 'ப்ரஸ்தான த்ரயம்' என்று வழங்கப்படுகின்றன. அறுதிப் பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது இதன் பொருள்.

வேதகாலச் சிந்தனையின் மணிமகுடமாகத் திகழ்பவை உபநிஷதங்கள். அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சியில் மனித மனத்தால் தொடக்கூடிய எல்லையை உபநிஷதங்கள் தொட்டுவிட்டன என்றே உலகின் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.

உபநிஷதங்கள் பல. அவற்றுள் நூற்றியெட்டு பொதுவாக கணக்கில் கொள்ளப்படுகின்றன. அவற்றில் பதிநான்கு உபநிஷதங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவை ஈச, கேன, ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய, தைத்திரீய, சாந்தோக்ய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, கௌசீதகி, மஹாநாராயண, மைத்ராயணி உபநிஷதங்கள் ஆகும். இவை கீழ்க்கண்ட பட்டியலின்படி நான்கு வேதங்களில் அமைந்துள்ளன. இவற்றுள் முதல் பத்து உபநிஷதங்களுக்கு ஸ்ரீசங்கரர் விளக்கவுரை எழுதியுள்ளார்.






ஐதரேய, கௌசீதகிரிக்
ஈச, கட, தைத்திரீய,பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, மைத்ராயணீ, மஹாநாராயணயஜூர்
கேன, சாந்தோக்கியசாம
ப்ரச்ன, முண்டக, மாண்டூக்யஅதர்வண


மனிதன், உலகம், இறைவன் என்பவை மூன்று அடிப்படை உண்மைகள். உபநிஷதங்கள் இந்த மூன்றையும், இவற்றிற்கு இடையே நிலவுகின்ற தொடர்பையும் ஆராய்கின்றன. அறுதி உண்மையாகிய இறைவனை ஒவ்வொரு மனிதனும், ஒவ்வோர் உயிரும் சென்று அடைவதே வாழ்க்கையின் லட்சியம், அதற்கான களமே உலகம். உலகம் தருகின்ற அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு, உலகில் வாழ்ந்தபடியே அந்த லட்சியத்தை அடையுமாறு உபநிஷதங்கள் வலியுறுத்துகின்றன. இதற்கு ஒவ்வோர் உபநிஷதமும் தனக்கென்று சில குறிப்பிட்ட பாதைகளைக் காட்டுகிறது. இந்த பாதை வித்யை எனப்படுகிறது. வித்யைகள் எண்ணற்றவை. 14 முக்கிய உபநிஷதங்களில்ய்மாக சுமார் 35 வித்யைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வித்யைகளின் செயல்முறைகளோ சரியான பொருளோ நமக்குத் தெரியவில்லை.

மூலம் : உபநிஷதங்கள். ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை - 4

Wednesday, July 2, 2008

வேதங்கள் ஒரு அறிமுகம்

உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் முழ்கி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பாரதத் திருநாடு ஆன்ம ஒளியில் விழித்தெழுந்தது. அதன் தவப்புதல்வர்களாகிய ரிஷிகள், 'இருளுக்கு அப்பால் பொன்னிறத்தில் ஒளிர்கின்ற மகிமை வாய்ந்த பரம்பொருளை அறிந்துகொண்டேன். அவரை அறிவதால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும். வேறு எந்த வழியும் இல்லை', 'அழியாத அமரத்துவத்தின் குழந்தைகளே, கேளுங்கள்', என்று பூமியில் வாழ்பவர்களை மட்டுமல்ல, பிற உலகங்களில் வாழ்வோரையும் அறைகூவினர். 'குறித்து வைக்கப்பட்ட சரித்திரமோ, பாரம்பரியத்தின் மங்கிய வெளிச்சமோ கூட ஊடுருவ முடியாத, காலத்தின் அந்த நீண்ட நெடுந்தொலைவில், இந்த உலகைப் புனிதமாக்கியபடி வாழ்ந்த அந்த ரிஷிகள் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.

உலகிலேயே மிகப்பழைய நூல் இந்தச் சிந்தனைக் கருவூலம்தான். 'இது எப்போது தோன்றியது என்பது ஒருவருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக இருக்கலாம்... ஆனால் அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன; ஏன், முன்னைவிட புதுப் பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம்.

வேதங்கள் யாராலும் எழுதப்பட்டவை அல்ல. என்றென்றும் நின்று நிலவுகின்ற உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். 'புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்துவிட்டாலும் இருக்கும். அவ்வாறுதான் ஆன்மீக உலகின் விதிகளும்... அவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன. நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும் என்று எழுதுகிறார் சுவாமி விவேகானந்தர். ரிஷிகள் அவற்றை வெளிப்படுத்தினார்கள், அவ்வளவுதான்.

அவ்வாறு ரிஷிகள் வெளிப்படுத்திய அந்த உண்மைகள் பின்னாளில் வியாச முனிவரால் நாங்ஆகத் தொகுக்கப்பட்டன. அவை ரிக், யஜூர், சாம மற்றும் அதர்வண வேதங்கள். ஒவ்வொரு வேதமும் மூண்று முக்கியப் பிரிவாக பிரிக்கப்படுகின்றன. அவை "சம்ஹிதை"(தேவர்களிடம் பிரார்த்தணைகள்), பிராம்மணம் (யாக விவரங்கள்), ஆரண்யகம் (உபநிஷதங்கள்; அறுதி உண்மையைப்பற்றிய ஆராய்ச்சி).

மூலம் : உபநிஷதங்கள். ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை - 4

வணக்கம்.

வணக்கம். ஏதோ ஆர்வத்தில் ஒரு ப்ளாக்கர் கணக்கை தொடங்கியாச்சு. ஆனா என்ன எழுதறதுன்னு தான் தெரியலை. எந்த ஒரு விஷயத்தைப் பத்தியும் ஆழ்ந்த அறிவு இல்லாமலே வளர்ந்தாச்சு. ஒவ்வொரு விஷயத்தைப் பத்தியும் மத்தவங்க எழுதுனத படிக்கும்போது ஒரே பிரமிப்பா இருக்கு. உள்ளூர் அரசியல், உலக அரசியல், பொருளாததரம், பூகோளம், விலைவாசி உயர்வு, பணவீக்கம் அப்டீன்னு நம்ம வலைப்பதிவர்கள் தொடாத விஷயமே இல்லை. ஆனா அதுல எந்த ஒரு விஷயத்தைப்பத்தியும் நமக்கு அனா, ஆவன்னா கூடத் தெரியலையேன்னு நினைக்கும் போது நம்மளப்பத்தி நமக்கு இருக்கற அபிமானம் அப்பிடியே தலைகீழாயிடுது.

சரி. இனிமேயாச்சும் ஏதாவது உருப்படியா எழுதனும்ன்னு ஒரு மதிய தூக்க முடிவில்(ஆபீஸ்ல இல்லை சாமி, வீட்லதான்) முடிவு பண்ணிட்டேன். எழுதறதுக்காவது படிக்கனும்ன்னும் முடிவு பண்ணிட்டேன். பாஸ் பண்ற அளவுக்கு மட்டும் பள்ளிக்கூடத்துல படிச்சதனால, எதுனா இங்கலீஷ்ல படிக்கறதுன்னாலே ஒரே உதறல். பார்ப்போம் வழக்கம்போல தீர்மானம் மட்டும் போட்டுட்டு அப்புறம் கண்டுக்காம விட்டுடற என்னோட சோம்பேறித்தனத்தை நினைச்சு நோகாம இருக்க முடியலை.

புரியாத விஷயங்களை முதல்ல தொடலாமான்னு ஒரு யோசனை. நம்ம வீட்டு பெரியவங்க எது கஷ்டமானதோ அதை முதல்ல முடி, அப்டீன்னு, அதைப் போல புரிஞ்சுக்கறதுக்கு கஷ்டமானதா ஆரம்பிக்கப்போறேன். ஆனா 0 லேந்து ஆரம்பிக்கறதுனால எல்லாமே கஷ்டமானத இருக்கு. ரொம்ப யோசனைக்கு அப்புறம், ஆன்மீகத்த தொடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்காக சுகபோதானந்தா மாதிரி பெரிய பிரசங்கமெல்லாம் எதிர்பார்க்காதீங்க. எல்லாமே காபி பேஸ்ட் தான். எழுதற சாக்கிலேயாவது புரிஞ்க்கலாம்ன்னுதான். முதல் வேலையா, ராமக்ருஷ்ண மடத்துக்கு போய் உபநிஷதங்களைப் பத்துன புத்தகங்களை வாங்கி கிட்டு வந்துட்டேன். அதுலேந்து ஒவ்வொண்ணா உருவி எழுதப்போறேன்.

நான் சொல்ல வர்றது என்னான்னா, இனிமே சில அமெச்சூர் தனமான ஆர்டிகில்ஸ் என்கிட்டேந்து வரும்.

டிஸ்கி : எழுதறதுல போதுமான விஷ்யஞானமெல்லாம் எனக்கு கிடையாது. சந்தேகங்களைக் கேட்டு தயவு செஞ்சு என்ன சங்கடப்படுத்தாதீங்க. மேற்கொண்டு உங்களுக்கு ஏதாச்சும் தெரியுமுன்னா, பின்னூட்டங்களா எழுதுங்க. கடுமையான சொற்களை தயவு செஞ்சு தவிர்த்திடுங்க.